Published : 21 Feb 2023 01:31 PM
Last Updated : 21 Feb 2023 01:31 PM

சிவ சேனாவுக்கு உரிமை கோரும் உத்தவ் தாக்கரே - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

உத்தவ் தாக்கரே

புதுடெல்லி: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான எம்எல்ஏக்கள் விலகி பாஜக .வில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.

இதனிடையே சிவசேனாவின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணிகள் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த ஆணையம், சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னம் ஷிண்டே அணிக்கு என்று கடந்த 17-ம் தேதி அறிவித்தது.

சிவசேனா கட்சிக்கு ரூ.186 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் இருக்கின்றன. அதோடு வங்கிக் கணக்குகளில் ரூ.148.46 கோடி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிவசேனா கட்சியின் சொத்துகள், பணம் முழுவதும் தற்போது ஷிண்டே அணிக்கு செல்கிறது.

இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டைச் சந்தித்து, சிவ சேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்து, கட்சியின் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x