Published : 07 Feb 2023 11:32 AM
Last Updated : 07 Feb 2023 11:32 AM

அதானி விவகாரம்: கடும் அமளியால் மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்ப முயன்றதைத் தொடர்ந்து மக்களவை நடவடிக்கைகள் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தில் ஆம் ஆத்மி கட்சியைத் தவிர பிற எதிர்கட்சிகள் பங்கேற்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அந்த வகையில் மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சிகள் அதானி குழும பிரச்சினையை எழுப்ப முயன்றன. அதற்கு கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ளுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். ஆனாலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியாதால், மதியம் 12 மணி வரை சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றக்கூட்டத் தொடர் ஜன.31-ம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கியது. பிப்.1ம் தேதி 2023 - 24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதானி குழும விவகாரங்கள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவர் உரை மீதும், பட்ஜெட் உரை மீதும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக எதிர்கட்சிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற விவாதத்தில் ஆம் ஆத்மி தவிர பிற எதிர்க்கட்சிகள் இன்று பங்கேற்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரும்பாலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடைமுறைகளில் பங்கேற்க முடிவெடுத்துள்ளன. மேலும், பிரதமர் தொடர்புடைய அதானி குழும மெகா ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையையும் முன்வைப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாரந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை நாடாளுன்றத்தில் நடைபெற்றது.

முன்னதாக, நாடாளுமன்றத்தின் இன்றையக் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து வியூகம் அமைப்பதற்கு மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நாடாளுமன்ற அலுவல் அறையில் எதிர்க்கட்சி எம்பிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "நாங்கள் ஒரு பிரச்சினையை எழுப்புவதற்கு முன்பாகவே அவர்கள் அவையை ஒத்திவைத்து விடுகின்றனர். எங்கள் நோட்டீஸ் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை ஆனால் சபை சரியாக நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள். அதை சரியாக நடத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்களா? நாங்கள் அமளியில் ஈடுபடுவதாக அவர்கள் பொய்யை பரப்புகிறார்கள். பொய் கூறுவதில் பாஜகவின் திறமையானவர்கள். பொய் கூறுவதிலும், மக்களை தவறாக வழிநடத்திலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x