Published : 28 Dec 2016 07:53 PM
Last Updated : 28 Dec 2016 07:53 PM
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் ஜனவரி 4-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதமும் உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதமும் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநில பேரவைகளுக்கு பிப்ரவரி மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி 4-ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் 7 கட்டமாகவும் மற்ற 4 மாநிலங்களில் ஓரே கட்டமாகவும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் அறிவிப்பு வெளியானதும் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த தயாராக இருக்குமாறு மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் நகலையும் அனுப்பி வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT