Published : 19 Jan 2023 02:44 PM
Last Updated : 19 Jan 2023 02:44 PM

லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு | மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன் வழங்க உ.பி. அரசு எதிர்ப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுக்கு ஜாமீன் வழங்க உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அஜய் மிஸ்ரா மகனின் ஜாமீன் மனுவினை நீதிபதிகள் சூர்யகாந்த் ஜேகே மகேஷ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் என்ன அடிப்படையில் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கேட்டனர். அதற்கு உத்தரப் பிரதேச அரசு சார்பாக ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல்," இது மிகவும் தீங்கான, கொடுமையான குற்றமாகும். இவருக்கு ஜாமீன் வழங்கினால் அது சமுதாயத்திற்கு தவறான செய்தியாகிவிடும்" என்றார்.

அப்போது நீதிபதிகள், "நாங்கள் முதன்மையான கோணத்தில் பார்க்கிறோம் அவர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார், குற்றம் சாட்டப்பட்டவர், அப்பாவி இல்லை. அவர் ஆதாரங்களை அழிக்க முயன்றாரா?" என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், இதுவரை அப்படி நடக்கவில்லை என்றார். அப்போது ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரவிப்பவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ், "அந்த சம்பவம் ஒரு கூட்டுச்சதி மற்றும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை. குற்றப்பத்திரிக்கையில் இருந்து இதனை காட்ட முடியும். குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரம் மிக்க ஒருவரின் மகன். சக்திவாய்ந்த ஒரு வழக்கறிஞர் அவருக்காக வாதாடுகிறார் என்றார்.

இந்த வாதத்திற்கு மிஸ்ரா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆட்சேபம் தெரிவித்தார். அவர், என்ன இது?, நாங்கள் தினமும் ஆஜராகிறோம், ஜாமீன் வழங்காமல் இருப்பதற்கு இது ஒரு காரணமா? என்று கேட்டார். மேலும், "தனது கட்சிக்காரர் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு நடைபெறும் விதத்தை பார்க்கும் போது இன்னும் ஏழு எட்டு ஆண்டுகள் கூட வழக்கு நடக்கலாம். இந்த வழக்கின் புகார்தாரரான ஜெக்ஜித் சிங் சம்பவத்தை நேரில் பார்த்தவர் இல்லை. அவர் கேட்ட செய்திகளின் அடிப்படையில் புகார் தெரிவித்துள்ளார்.

என்னுடைய கட்சிக்காரருக்கு முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்தது. இது ஒன்றும் சேவல் காளை கதை இல்லை. என்னுடைய கட்சிக்காரர் குற்றவாளி இல்லை. அவர் மீது பழைய குற்ற வழக்குகள் எதுவும் இல்லை" என்றார்

லக்கிம்பூர் கேரி வன்முறை... கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி காலை வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.

அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சிறப்பு புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த அந்த 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 'லக்கிம்பூர் கேரி சம்பவம் விபத்து கிடையாது. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தால் செய்யப்பட்ட கொலை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதால் ஆஷிஸ் மிஸ்ரா சிறையில் இருந்து வெளிவந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x