Published : 18 Jan 2023 06:28 AM
Last Updated : 18 Jan 2023 06:28 AM

பொருளாதாரத்தில் இந்தியாவை 5-வது மிகப் பெரிய நாடாக மாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு: பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நாட்டை 5-வது மிகப் பெரிய நாடாக மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்து பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் சமூக பொருளாதார தீர்மான நிறைவேற்றப்பட்டது.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், இந்தாண்டு 9 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு கருப்பொருளிலில் கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. இந்த தேசிய செயற் குழு கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த 2-வதுநாள் கூட்டத்தில் சமூக-பொருளாதார தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாதாரத்தில் மிக மோசமான 5 நாடுகள் என்ற பட்டியலில் இருந்து இந்தியாவை 5வது மிகப் பெரிய பொருளாதார நாடு என மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகத்தில் நிறைவு, அரசின் திட்டங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவையும் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜ தேசியக் குழு தனது நன்றி தெரிவித்தது. நாட்டில் டிஜிட்டல் பணபரிமாற்ற சூழலை மேம்படுத்தியற்காகவும், உலகளாவில டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதற்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக, நாட்டின் வரி வசூல் 22.6 சதவீதம் அதிகரித்துள்ளதும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன் மொழிந்ததாகவும், மத்திய அமைச்சர் முரளீதரன், ஹரியானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி சுனிதா தக்கல் ஆகியோர் வழிமொழிந்ததாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை கேட்டு பாஜகவை எதிர்கட்சிகள் கேலி செய்து வந்தன. தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு அதை திறப்பதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டரை ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்தை அனைத்தும் உள்ளடங்கியதாகவும், தற்சார்புடையதாகவும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான முன்னேற்றம் என்பது வெறும் கோஷம் மட்டும் அல்ல. அது பாஜக.,வின் தத்துவம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதாரத்தில் மிக மோசமான 5 நாடுகள் பட்டியலில் இந்தியா இருந்தது. தற்போது, 75-ம் ஆண்டு சுதந்திரத்தை நாடு நிறைவு செய்யும்போது, அது இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, பொருளாதாரத்தில் 5-வது பெரிய நடாக உள்ளது. ஏழைகளுக்கு இலவச ரேஷன், அனைவருக்கும் சொந்த வீடு, கரோனா பெருந்தொற்று சமயத்தில் இலவச தடுப்பூசி செலுத்தியது ஆகியவையும் செயற்குழு தீர்மானத்தில் இடம் பெற்றள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், உலகளவிலான பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.6 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

ஜே.பி. நட்டாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

பாஜக தலைவர் நட்டா தலைமையில் கரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியது மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. மேலும், அவரது தலைமையில் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியினை பாஜக பதிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் நட்டா தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, 2024 ஜூன் மாதம் வரை பாஜகவின் தலைவராக ஜே.பி.நட்டா தொடர்ந்து நீடிப்பார். இவர்களது சீரிய தலைமையில், 2019-ல் பெற்ற வெற்றியை காட்டிலும் 2024-ல் சிறப்பான வெற்றியை பாஜக பதிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x