Published : 12 Jan 2023 04:14 AM
Last Updated : 12 Jan 2023 04:14 AM

ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி

பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கியுள்ளது.

குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (விசோராட்ஸ்), ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை ரூ.1,920 கோடி மதிப்பில் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

விசோராட்ஸ் ஏவுகணைகள் சீன எல்லையில் பயன்படுத்த தேவைப்படுகின்றன. எளிதில் தூக்கிச் செல்லக் கூடிய விசோராட்ஸ் ஏவுகணைகளை கரடுமுரடான மலைப்பகுதிகள் மற்றும் கடலில் பயன்படுத்தி, எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும்.

இதுதவிர, 500 ஹெலினா ஏவுகணைகளை வாங்கவும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இலகு ரக ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் இந்த ஏவுகணைகள், எதிரிநாட்டு பீரங்கி வாகனங்களைத் தகர்க்கும் திறன் வாய்ந்தவை. இந்த வகை ஏவுகணைகள், ராணுவத்தின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும்.

கடற்படையின் பயன்பாட்டுக்காக, சிவாலிக் வகை போர்க் கப்பல்களில் பயன்படுத்தக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளின் லாஞ்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், அடுத்த தலைமுறை ஏவுகணைகளைக் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போர்க்கப்பல்களின் தாக்குதல் திறன் மேம்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x