Published : 09 Jan 2023 01:04 PM
Last Updated : 09 Jan 2023 01:04 PM

முறையாக கைது செய்யப்படவில்லை; ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ விடுதலை: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

சந்தா கோச்சா | கோப்புப்படம்

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் கடந்த மாதம் சிபிஐ கைது நடவடிக்கைக்கு உள்ளான ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை கடந்த மாதத்தில் சிபிஐ கைது செய்தது. சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கிய மோசடி குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வந்தது. இது தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிபிஐ-யின் கைது நடவடிக்கையை எதிர்த்து சந்தா கோச்சார், தீபக் கோச்சார் தம்பதி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, விடுமுறை கால அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது, "இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை. அதனால், விடுமுறை முடிந்து நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கும்போது மனுதாரர்கள் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஜன.6ம் தேதி நடைபெற்றது. அப்போது அனைத்து வாதங்களும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை இன்றஒக்கு (ஜன.9) ஒத்தி வைத்தனர்.

வழக்கு விசாரணையின் போது, "ஊழல் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 17 ஏ-யின் படி எங்களின் கைது சட்டவிரோதமானது. அதன்படி ஒரு விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிபிஐ அப்படி எந்த முன் அனுமதியும் பெறவில்லை" என்று கோச்சார் தம்பதி வாதிட்டனர். அவரது வழக்கறிஞர்கள், "சந்தா கோச்சார் கைது செய்யப்படும் போது பெண் அதிகாரி அங்கு இல்லை" என்று தெரிவித்தனர்.

தீபக் கோச்சார் வழக்கறிஞர்கள், "குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 41 ஏயின் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு தம்பதிகள் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சிபிஐ விசாரணைக்கு அழைத்த போது எல்லாம் அவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அதனால் இதில் கைது நடவடிக்கைக்கு அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சிபிஐ, கோச்சார் தம்பதிகள் விசாரணைக்கு அழைத்தபோது எல்லாம் ஆஜரானார்கள். ஆனால் உடல் மொழி மற்றும் கேள்விகளை தவிர்க்கும் படியான பதில்களை ஒத்துழைப்பு என்று கருத முடியாது. மேலும் இதுபோன்ற உயர்மட்ட ஊழல் குற்றங்களின் கைது நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது உடல் ரீதியாக தொட்டு அழைத்துச் செல்லவேண்டியது இல்லை. விசாரணை அதிகாரி முன்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. அவரை ஒரு பெண் காவலரே முழுமையாக சோதனை செய்தார்" என்று தெரிவித்தது.

இந்தநிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம் இந்த கைது நடவடிக்கை சட்டப்படி நடக்கவில்லை என்று கூறி சந்தா கோச்சார், தீபக் கோச்சார் இருவரையும் விடுதலை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதற்கிடையில், தம்பதிகள் இருவரும் ஜனவரி 15-ம் தேதி நடைபெற இருக்கிற தங்களின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x