Published : 02 Jan 2023 05:31 PM
Last Updated : 02 Jan 2023 05:31 PM

பணமதிப்பிழப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? - ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ரவி சங்கர் பிரசாத் | முன்னாள் மத்திய அமைச்சர்

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மைத் தீர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தவர் ராகுல் காந்தி. வெளிநாடு சென்றபோது அங்கும்கூட அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணபரிவர்த்தனை மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 2022 அக்டோபரில் ரூ.12 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை நடந்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது. ஏழை மக்களும்கூட டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். பணமிப்பிழப்பு நடவடிக்கைக்கு கிடைத்த பலன் இது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இதேபோல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாத நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் கல் எரியும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு மிகப் பெரிய அடி'' என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x