Published : 22 Dec 2022 08:41 AM
Last Updated : 22 Dec 2022 08:41 AM

கரோனா தாக்கிவிடும் என்ற பயத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த தாய், மகள் மீட்பு 

காக்கிநாடா: கரோனா தாக்கிவிடும் என்ற பயத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த தாய், மகள் ஆகியோர் மீட்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் குய்யேரு கிராமத்தைச் சேர்ந்தவர் கர்நீதி கே. சூரியபாபு. இவரின் மனைவி கே. மணி (44). இவரது மகள் துர்கா பவானி (20). கரோனா காலத்தில் ஏற்பட்ட பயம் காரணமாகவும், தங்களை யாரேனும் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தாலும், தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கதவைப் பூட்டிக்கொண்டு வாழ்ந்தனர். எந்த ஒரு விஷயத்துக்காகவும் அவர்கள் வெளியே வரவில்லை.

மணியின் கணவர் கே. சூரியபாபு, வெளியே சென்று உணவுப் பொருட்களை வாங்கி வந்து தருவார். இந்நிலையில் இருவரின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததால், மணியின் கணவர் கே. சூரியபாபு உள்ளூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள், போலீஸாரின் உதவியை நாடினார்.

இதையடுத்து, போலீஸாரும், சுகாதாரத்துறை ஊழியர்களும், மணியையும், அவரின் மகள் பவானியையும் நேற்று முன்தினம் மீட்பதற்காக அவர்களது வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும், உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாக கூறி கதவை திறக்க மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அதிகாரிகள் இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரையும் அவர்கள் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்தனர்.

மணியும், அவரின் மகள் பவானியும் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே போர்வையில்தான் படுத்து தூங்கியுள்ளனர். இதுகுறித்து மணியின் கணவர் சூரியபாபு கூறியதாவது:

என் மனைவியும், மகளும் எப்போதாவதுதான் வீட்டைவிட்டு வெளியே வருவார்கள். நான் உணவு சமைத்து இருவருக்கும் ஜன்னல் வழியாக வழங்குவேன்.நான்தான் வெளியே சென்று உணவுக்கான பொருட்களை வாங்கி வருவேன்.

கடந்த சில மாதங்களாக என்னை ஜன்னல் வழியாக உணவு வழங்கவும் இருவரும் அனு மதிக்கவில்லை. இதனால் வேறு வீட்டில் நான் தங்கிக் கொண்டு அங்கு சமையல் செய்து உணவை எடுத்து வந்து கதவின் அருகே வைத்துவிடுவேன். அவர்கள் உள்ளே எடுத்துச் சென்று சாப்பிடுவார்கள்.

சமீபகாலமாக இருவரின் உடல் நிலையும் மோசமடைந்து வந்தது, இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல், மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே, போலீஸாரை யும், அதிகாரிகளையும் நாடினேன். தற்போது மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து காக்கிநாடா அரசு மருத்துவமனை டாக்டர் ஹேமலதா கூறும்போது, “அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடைபெறுகிறது. எனவே, அவர்களை கண்காணிப்பில் வைத்துள்ளோம். தேவைப்பட்டால் அவர்களுக்கு உளவியல் நிபுணர் மூலம் சிகிச்சை அளிப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x