Published : 19 Dec 2022 05:51 PM
Last Updated : 19 Dec 2022 05:51 PM

நமது ராணுவத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை: பியூஷ் கோயல்

பியூஷ் கோயல் | கோப்புப் படம்

புதுடெல்லி: நமது ராணுவத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இது குறித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நாம் அவையில் இது குறித்து விவாதிக்காமல் வேறு எது குறித்து விவாதிக்க வேண்டும்? இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாம் தயாராக வேண்டும்" என வலியுறுத்தினார். எனினும், மாநிலங்களவை தலைவர் இதை ஏற்க மறுத்ததை அடுத்து, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. அவர்கள் விரக்தில் இருப்பதையே இது காட்டியது. அவையின் விதிகளை அவர்கள் மதிக்கவில்லை. அவைத் தலைவரின் வார்த்தைகளை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. எந்த ஒரு ஒழுங்கின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. முன்னேறிச் செல்வதற்கு விடாமல் தடையை ஏற்படுத்துவது, நாசத்தை ஏற்படுத்துவது என்பதாகத்தான் அவர்களின் செயல் இருந்தது.

நமது எதிர்க்கட்சிகளுக்கு நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை. இது நமது ராணுவத்துக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியது. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட உணர்வு சார்ந்த விவகாரங்களில் நமது நாடாளுமன்றம் உரசல் இன்றி செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும். ஜனநாயக மதிப்பீடுகளை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் கட்சி, நமது ராணுவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்புவது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x