Published : 19 Dec 2022 02:05 PM
Last Updated : 19 Dec 2022 02:05 PM

டெல்லியில் மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்: ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

ராம் லீலா மைதானத்தில் குழுமியுள்ள விவசாயிகள்

புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். 560 மாவட்டங்களில் இருந்து 60,000 கிராமப்புற விவசாயிகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக போராட்டத்தை நடத்தும் பாரதிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாரதிய விவசாயிகள் சங்கத்தின் பிரச்சாரத் தலைவர் ராகவேந்திர படேல் கூறியதாவது: ''விவசாயிகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 4 மாதங்களுக்கு முன்பு மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் தொடங்கினோம். இதன்மூலம் 20,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். 13,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிள் பேரணி நடத்தி உள்ளோம். 18,000 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி உள்ளோம். அதோடு, பல்வேறு இடங்களில் மிகப் பெரிய பொதுக்கூட்டங்களையும் நடத்தி உள்ளோம். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடுத்தே, தற்போது புதுடெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஒன்றுகூடி உள்ளோம். நாங்கள் அரசுக்கு 4 கோரிக்கைகளை முன்வைக்கிறோம். அவை:

  1. குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.
  2. அனைத்து வகையான விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
  3. தற்போது மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு அளித்து வரும் ஆண்டுக்கு ரூ.6,000 எனும் தொகையை உயர்த்த வேண்டும்.
  4. மரபணு மாற்ற பயிர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

இந்த 4 கோரிக்கைகளையும் அரசு விரைவாக நிறைவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x