Published : 18 Dec 2022 05:15 PM
Last Updated : 18 Dec 2022 05:15 PM

வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மை, ஊழலுக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்: பிரதமர் பெருமிதம்

பிரதமர் மோடி

ஷில்லாங்: ‘‘கடந்த 8 ஆண்டுகளில் பாஜக ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த அமைதியின்மைக்கு, ஊழலுக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 1972-ம் ஆண்டு முறைப்படித் தொடங்கப்பட்ட வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டத்தையொட்டி இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டில், வடகிழக்கு கவுன்சிலின் பங்களிப்பு குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், "கால்பந்து விளையாட்டில் அதன் மாண்புக்கு எதிராக விளையாடுபவர்களுக்கு சிவப்பு கார்டு காட்டப்படுவது வழக்கம். சிவப்பு கார்டு காட்டப்படும் வீரர் போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக பாஜக ஆட்சி வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியின்மை, ஊழல், வாரிசு அரசியல், அமைதியின்மை ஆகியனவற்றிற்கு சிவப்பு கார்டு காட்டியுள்ளோம்.

வடகிழக்கு மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம். இன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள வேளையில், நான் ஷில்லாங்கில் கால்பந்து மைதானத்தில் பேரணியில் ஈடுபட்டுள்ளேன். இன்று கத்தாரில் நடைபெறும் போட்டிகளுக்கு நாம் ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறோம். நம் தேசத்திலேயே சர்வதேச போட்டிகளை நடத்தி நம் தேசியக் கொடியை ஓங்கி உயர பறக்கச் செய்யும் காலம் தொலைவில் இல்லை.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை அமைத்திருப்பதன் மூலம், இந்த மண்டலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிக்க அரசு முன்வந்திருக்கிறது. இந்த மண்டலத்தில் உள்ள 8 மாநிலங்களில், 200க்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு (டிஓபிஎஸ்) திட்டன் கீழ், இந்த மண்டலத்தைச் சேர்ந்த பல தடகள வீரர்-வீராங்கனைகள் பலனடைந்து வருகின்றனர்.

2014-க்கு முன்னர் வடகிழக்கு மாநிலங்களுக்கு வாரத்திற்கு 900 விமானங்கள் வந்து செல்லும். இப்போது 1900 விமானங்கள் வந்து செல்கின்றன. விமான சேவை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கிருஷி உடான் மூலம் இந்த மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை, நாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் தற்போது அனுப்ப முடிகிறது.

வடகிழக்கு மாநிலங்கள் தற்போது நீர்மின்சாரத்தின் சக்தி மையங்களாக மாறியிருக்கிறது. இது அவற்றை மின் உபரி மாநிலங்களாக மாற்றும். அவ்வாறு மாற்றுவது, தொழில்சாலைகள் உருவாக்கத்திற்கும், அதிகளவிலான வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும். வடகிழக்கு மண்டலத்தின் கலாச்சாரம் மற்றும் இயற்கை அமைப்பு, உலக நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்ப்பதாக இருப்பதால், சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்த வேண்டியது அவசியம். 100 பல்கலைக்கழகங்களின் மாணவர்களைத் தேர்வுசெய்து, இந்த மண்டலத்தில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிவைப்பதன்மூலம், அவர்கள், இந்த மண்டலத்தின் தூதர்களாக மாறுவார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x