Published : 18 Dec 2022 04:26 AM
Last Updated : 18 Dec 2022 04:26 AM

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை: மத்திய சட்ட அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு: வாக்காளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக, ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, வாக்காளரின் விருப்பத்தின் அடிப்படையில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆதார் எண்ணைப் பெறலாம். அடையாளத்தை உறுதி செய்யும் நோக்கத்துக்காக மட்டுமே ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து எந்த தனிப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையம் பெறுவதில்லை. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது விருப்பத்தின் அடிப்படையிலானது. இது கட்டாயமில்லை. ஆதார் அங்கீகாரத்துக்காக வாக்காளர்களிடம் இருந்து 6-பி படிவத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது. எனினும், இந்த ஒப்புதலை திரும்பப் பெறுவதற்கான விதிகள் எதுவும் இல்லை.

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக கருத்துக் கணிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

இதுவரை, சுமார் 50 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x