Last Updated : 11 Dec, 2022 05:57 AM

 

Published : 11 Dec 2022 05:57 AM
Last Updated : 11 Dec 2022 05:57 AM

முதல் முறையாக வாரணாசியில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம் - தமிழக அரசு சார்பில் இன்று நினைவகம் திறப்பு

பாரதியார் வீட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

புதுடெல்லி: உ.பி.யில் காசி எனும் வாரணாசியில் அனுமர் படித்துறை பகுதியில் தமிழ் பிராமணர்கள் வாழ்கின்றனர். சுமார் 4 தலைமுறைக்கு முன்பு இங்கு குடியேறியவர்களுள் பாரதியாரின் அத்தை குப்பம்மாள் என்ற ருக்மணியின் கணவர் பிரம்ம ஸ்ரீகிருஷ்ண சிவனும் ஒருவர். இவரது ‘சிவமடம்’ எனும் வீட்டில் பாரதியார் தன் இளம் வயதில் நான்கரை ஆண்டுகள் வாழ்ந்தார்.

இதுதொடர்பான ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடர்ந்து வெளியிட்ட செய்திக்கு பிறகு பாரதியாரின் வீட்டுக்கு நேரில் சென்ற மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்தர பிரதான், அங்கு பெரியளவில் நினைவகம் அமைப்பதாக அறிவித்தார். இதற்கான பொறுப்பு வாரணாசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் அவரது அறிவுறுத்தலின் பேரில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ ஒரு மாதம் நிகழ்ச்சி நடைபெறுவதும் காரணமானது. மேலும் பாரதியார் பிறந்த தினம், இனி தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழலில், இன்று பாரதியாரின் வீட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தமிழருமான ஜெய்சங்கர் நேரில் செல்கிறார்.

ஏற்கெனவே இங்கு மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சில நாட்களுக்கு முன் வந்து சென்றனர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு, பாரதி குடும்பத்தாருடன் பேசி அவர்களது வீட்டின் ஒரு சிறிய அறையை நினைவகமாக்க முடிவு செய்தது. இதற்கான அரசு ஆணையை கடந்த ஜுலை 5-ம் தேதி வெளியிட்டு பாரதியார் நினைவு அறையின் பணிகளை முடித்துள்ளது. இதன் திறப்பு விழாவை இன்று காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார். வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்துகொள்கிறார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அனுமர் படித்துறை தமிழர்கள் வட்டாரம் கூறும்போது, ‘‘முதலாவதாக தமிழக அரசு நினைவறையை ரூ.18 லட்சங்களில் அமைந்தது. இதை அறிந்த மத்திய அரசு, பாஜக ஆளும் உ.பி. அரசு மூலம் ரூ.6 கோடியில் பாரதி வீட்டை புனரமைப்பதுடன் அதன் தரை தளம் முழுவதிலும் டிஜிட்டல் நினைவகம் அமைக்கிறது. தொடக்கத்தில் இரண்டு அரசுகளுக்கும் உருவான போட்டியின் இடையில் இருந்த ஆட்சியர் ராஜலிங்கமும் தமிழர் என்பதால் தற்போது சுமூகமான முடிவு ஏற்பட்டு உ.பி. தமிழகம் என இரண்டுமே நினைவகங்கள் அமைக்கின்றன. ஆனால், உ.பி. அரசு பல கோடி ரூபாய் செலவில் பாரதிக்கு பிரம்மாண்டமாக நினைவகம் அமைப்பது சிறப்பு. மேலும், பாஜக - திமுக அரசுகளுக்கு இடையிலான மோதல் தவிர்க்கப்பட்டிருப்பதும் முக்கியமானது’’ என்று தெரிவித்தனர்.

தமிழக அரசின் நினைவகத்தில் பாரதியின் மார்பளவு சிலை, சில படங்கள் மற்றும் அவரது நூல்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. உ.பி. அரசு திட்டமிட்டுள்ளதில், ஒலி, ஒளிக் காட்சிகளாக பாரதியின் பாடல்கள் இடம்பெறுகின்றன. மேலும், இங்கு பாரதியின் டிஜிட்டல் உருவம், அந்த வீட்டில் கம்பீரமாக உலா வருவது போன்ற பல சிறப்பம்சங்கள் அமைய உள்ளன. இதுபோல், ஒரே தலைவருக்கு ஒரே இடத்தில் 2 மாநில அரசுகளின் சார்பில் நினைவகம் அமைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x