Published : 17 Nov 2022 11:55 AM
Last Updated : 17 Nov 2022 11:55 AM

ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியில் தேசிய கீதத்துக்கு பதில் மாற்றி ஒலிபரப்பப்பட்ட பாடல்: பாஜக கிண்டல்

மேடையில் தவறை சுட்டிக்காட்டும் ராகுல் காந்தி

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இசைக்கப்பட்டது குறித்து பாஜகவினர் ராகுலையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிகழ்ச்சி ஒன்றில், தேசிய கீதம் என்ற பெயரில் வேறு ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டுடன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பிழை குறித்து ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியினரை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

அதுகுறித்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மகாராஷ்டிரா மாநில பாஜக பிரமுகர் நித்திஸ் ரானே "பப்புவின் காமெடி சர்க்கஸ்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி, "என்ன ராகுல் காந்தி இது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வாசிம் மாவட்டத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கான சமூகவலைதள நேரடி ஒளிபரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. கூட்டத்தில் ராகுல்காந்தி பேசி முடித்ததும், அடுத்ததாக தேசிய கீதம் என்று அறிவிக்கப்படுகிறது. தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நிற்கின்றனர். ஆனால் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலிபரப்பப்படுகிறது. உடனடியாக தவறு சரி செய்யப்பட்டு முந்தைய பாடல் நிறுத்தப்பட்டு, பின்னர் முறையான தேசிய கீதம் இசைக்ககப்பட்டது.ம்இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

ராகுல் காந்தி கடந்த செப்.7 ஆம் தேதி மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா வழியாக பயணப்பட்டு தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x