சிறுவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தெலங்கானா அமைச்சர்: குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்

தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் | கோப்புப்படம்
தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் | கோப்புப்படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: சிறுவனின் கோரிக்கையை தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் உடனடியாக தீர்த்து வைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கோல்டன் சிட்டி காலனி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும். அதனால், தமது பெற்றோர், சகோதரர்கள் தினமும் சுமார் 4 கி.மீ தூரம் வரை சென்று குடிநீர் வாங்கி வருவதாகவும், ஆதலால், குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக போக்க குழாய் அமைத்தால் இந்த அரசுக்கு நன்றியுடன் இருப்பேன் எனவும் உமர் எனும் 12 வயது சிறுவன் ட்விட்டர் பக்கத்தில் தமது பகுதி பிரச்சினை குறித்து பதிவு செய்திருந்தார்.

இதனை கண்ட தெலங்கானா மாநில நகராட்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ், சிறுவர்கள் தின விழா நடைபெற்ற தினத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்தார். அதன்பேரில், இப்பிரச்சினை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஜல மண்டலி அதிகாரி தாச கிஷோருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், அதிகாரி தாச கிஷோர், ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, சிறுவன் உமரை சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் அதிகாரி தாச கிஷோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பகுதியில் குடிநீர் பைப்லைன் அமைக்க ரூ. 2.85 கோடி ஹைதராபாத் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. சிறுவன் உமரின் கோரிக்கையை ஏற்று, அவருக்காக இப்பகுதியில் உடனடியாக ரூ. 94 லட்சம் செலவில் பைப் லைன் அமைக்கும் பணி மழை நின்றவுடன் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுவர்கள் தின விழாவில், ஒரு சிறுவன் அளித்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in