Published : 14 Oct 2022 07:10 AM
Last Updated : 14 Oct 2022 07:10 AM

கடந்தகால சவால்களை புதிய இந்தியா விரைவாக வெற்றி கொள்கிறது - பிரதமர் மோடி பேச்சு

இமாச்சல பிரதேசத்தின் உனாவிலிருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், இமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் ஆகியோர் உடன் உள்ளனர்.படம்: பிடிஐ.

உனா: நாட்டின் 4-வது வந்தே பாரத் ரயிலை இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். உனாவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். இது நாட்டில் அறிமுகம் செய்யப்படும் நான்காவது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் என்பதால், டெல்லியில் இருந்து இமாச்சலுக்கு மிக விரைவாக பயணம் செய்ய முடியும். இந்த ரயிலால் இமாச்சலின் சுற்றுலா மேம்படும்.

இமாச்சல பிரதேசத்தின் சம்மா மாவட்டத்தில் 2 நீர்மின் நிலைய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் ஆண்டுக்கு 270 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். உனாவில் புதிய ஐஐடி.யையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு பிரதமர் கடந்த 2017-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். ஹரோலி என்ற இடத்தில் ரூ.1,900 கோடி செலவில் உருவாக்கப்படும் மருந்து தொழில் பூங்காவுக்கும் பிரதமர் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த மருந்து பூங்கா, முக்கிய மருந்து மூலப் பொருட்களின் இறக்குமதியை குறைக்கும். ரூ.10,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும். 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். இந்த வளர்ச்சி திட்டங்களால் இந்த மாநிலம் ஆண்டுக்கு சுமார் ரூ.110 கோடி வருவாய் ஈட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.

உனாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த கால சவால்களை எல்லாம், புதிய இந்தியா மிக விரைவாக வெற்றி கொள்கிறது. 21-ம் நூற்றாண்டு மக்களுக்கு இரட்டை இன்ஜின் அரசு நவீன வசதிகளை அளித்து வருகிறது.

கரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் உலகம் முழுவதும் சென்றன. இதில் இமாச்சல பிரதேசத்தின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. இங்கு தொடங்கப்படும் மருந்து பூங்கா மூலம், நோயாளிகளுக்கு தரமான மற்றும் மலிவான சிகிச்சை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், ‘‘நாட்டின் நான்காவது வந்தே பாரத் ரயில் இமாச்சல பிரதேசத்துக்கு கிடைத்துள்ளது. இது இமாச்சல பிரதேசத்தின் வளர்ச்சியில் பிரதமரின் உறுதிப்பாட்டை காட்டுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x