Published : 11 Aug 2022 01:04 PM
Last Updated : 11 Aug 2022 01:04 PM

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்று (ஆகஸ்ட் 10-ம் தேதியுடன்) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அதேபோல, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர், மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 780 வாக்காளர்களில், 725 பேர் வாக்களித்திருந்தனர். அதாவது மொத்தம், 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.

பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. பதிவான வாக்குகளில் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் 14 வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஜெகதீப் தன்கர் யார்? - ராஜஸ்தான் மாநிலம் கிதானா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர் சில காலம் உச்ச நீதிமன்றத்தில் இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர் 1989-ம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுடன் இவருக்கு மோதல் போக்கே நிலவியது.

இதற்கிடையில், 14-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று பதவியேற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x