Published : 29 Sep 2016 03:16 PM
Last Updated : 29 Sep 2016 03:16 PM
பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ள நிலையில், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
ஆனாலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பள்ளத்தாக்கு முழுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை,
இதுகுறித்து போலீசார் தரப்பில், ''இன்று காஷ்மீரின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அதே நேரம் பள்ளத்தாக்கின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144-ன் கீழ் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் மூன்று நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததால் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கோய்மோ பகுதியில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அங்கே நிலைமை சீரடைந்ததால், ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6 வரை பந்த் நடத்தக்கோரி பிரிவினைவாதிகள் விடுத்த அழைப்பால், காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததைக் காண முடிந்தது. பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வெடித்த வன்முறையில் இரு போலீசார் உட்பட 82 பேர் பலியாகினர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT