Last Updated : 19 Jul, 2022 05:55 PM

 

Published : 19 Jul 2022 05:55 PM
Last Updated : 19 Jul 2022 05:55 PM

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தொகையை உயர்த்தும் யோசனை இல்லை: மத்திய அரசு

புதுடெல்லி: பிரதான் மந்திரி ஆவாஸ் ஜோஜ்னா எனும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் (PMAY) வீட்டுக்கான தொகையை உயர்த்தும் யோசனை அரசிடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை நாடாளுமன்ற மக்களவையில் இன்று ரவிக்குமார் எம்.பி எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில் தெரிவித்தார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், ''பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் (PMAY-G) கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான கட்டுமானத் தொகையை அதிகரிக்க அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அனைவருக்கும் வீடு என்னும் இலக்கை அடைய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த எழுத்துப்பூர்வமான பதில்: “தற்போது, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான கட்டுமானத் தொகையை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை.

கிராமப்புறங்களில் "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடைய, ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAYG) திட்டத்தை ஏப்ரல் 1, 2016 முதல் நடைமுறைப்படுத்துகிறது. மார்ச், 2024க்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PMAY-Gஇன் கீழ் பயனாளிகளை அடையாளம் காண்பது, சமூகப் பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு (எஸ்ஈசிசி) 2011இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வசதிகள் மற்றும் விலக்கு அளவுகோல்களின் அடிப்படையில் மற்றும் உரிய சரிபார்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

கிராம சபைகள் மற்றும் மேல்முறையீட்டு செயல்முறையை நிறைவு செய்தல் என்ற அடிப்படையில் 2.95 கோடி வீடுகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எஸ்ஈசிசி தரவுத்தளத்தின் மூலம் கிடைக்கும் தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது சுமார் 2.15 கோடியாக உள்ளது.

2011 எஸ்ஈசிசியின் கீழ் விடுபட்டதாகக் கூறப்படும் பயனாளிகளை அடையாளம் காண, ஜனவரி 2018 முதல் மார்ச் 2019 வரை அரசாங்கம் ஆவாஸ்+ கணக்கெடுப்பை நடத்தியது. 80 லட்சம் பேர் புதிதாக கண்டறியப்பட்டனர். அந்த இடைவெளியை நிரப்ப, ஆவாஸ் தரவு பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் 63.68 லட்சம் வீடுகள் தகுதியுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆவாஸ் திட்டத்தில் இன்று வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

'அனைவருக்கும் வீடு' என்ற இலக்கை அடைய அமைச்சகம் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: 1. அமைச்சக மட்டத்தில் முன்னேற்றம் பற்றிய வழக்கமான ஆய்வு, 2. திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைக்கென PMAY-G டாஷ்போர்டின் தொடக்கம் 3. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இலக்குகளை சரியான நேரத்தில் ஒதுக்கீடு செய்தல் மற்றும் போதுமான நிதியை விடுவித்தல், 4. பணி முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக மாநிலங்களுடன் வழக்கமான பின்தொடர்தல், மத்திய மற்றும் மாநில பங்கு, மற்றும் கிராமப்புறங்களில் நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்குதல். 5.செயல்திறன் குறியீட்டு டேஷ்போர்டின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்குதல்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போடி மற்றும் ஊக்கத்தை உருவாக்கப்படுகிறது.

கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொண்டு வீட்டைக் கட்டுவது இயலாது. அதனால் பல ஆண்டுகளாகப் பல்லாயிரக் கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன'' என்று அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x