Published : 19 Jul 2022 04:17 PM
Last Updated : 19 Jul 2022 04:17 PM

“மின் கட்டண உயர்வு... சொல்லாததையும் செய்வோம் என்பதன் அர்த்தமா?” - தமாகா விமர்சனம்

சென்னை: " மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வோம் என்று கூறுவதன் அர்த்தமா இது?" என்று தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டில் பயன்படுத்தும் யூனிட்டுகள் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (18.07.2022) அறிவித்துள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 12,647 கோடி கடன் உயர்ந்த உள்ளதாகவும், வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சாரத் துறையில் கடன் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்ததாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம், மேலும், 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம் எனவும், ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் அறிவிப்புகள் என்பது நாளுக்கு நாள் மக்களுடைய அதிருப்தியையும் மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கக்கூடிய அறிவிப்புகளாகவே இருக்கிறது. மின்சாரத் துறையின் சார்பில் ஏற்கெனவே மின்தடை என்பது அறிவிக்கப்படாத ஒன்றாக தொடர்கதையாகி வருகிறது. இதிலிருந்து மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய ஒரு போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. மின்சாரத் துறை அமைச்சரிடம் இது பற்றி காரணம் கேட்டால் அணில் போய் வந்து கொண்டிருக்கிறது இதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று ஒரு காரணத்தை கூறினார்.

அதன் பிறகு தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார் ஆனால் ஆளும் மத்திய அரசு போதிய நிலக்கரியை தமிழகத்திற்கு கொடுத்து விட்டதாக கூறுகிறது இப்படிப்பட்ட ஒரு குளறுபடியான நிர்வாகத்தை மின்சாரத்துறை நிர்வகித்துக் கொண்டுள்ளது இந்த மின் கட்டண மாற்றம் என்பது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அரசுதரப்பில் பல்வேறு காரணங்களை காட்டினாலும் கூட அவை அனைத்தும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வோம் என்று கூறுவதன் அர்த்தமா இது? ஏற்கெனவே அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து உள்ள சூழ்நிலையில் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மேலும் மேலும் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும். கரோனா காலகட்டம் என்பதால் மக்களின் வருமானம் குறைந்து வரும் சூழ்நிலையில் இது போன்ற மின் கட்டண உயர்வு சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அரசின் இந்த மாதிரியான செயல்கள் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக முதல்வர், அரசு செலவில் அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கார் , கிரீன்வேஸ் சாலை பங்களா உள்ளிட்ட எண்ணிலடங்கா சலுகைகளை பறித்து மக்களை விலையேற்றத்தில் இருந்து காக்க வழி வகை தேட வேண்டும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x