Published : 16 Jul 2022 07:38 AM
Last Updated : 16 Jul 2022 07:38 AM

7 மணிக்கு மாணவர்கள் பள்ளி வரும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா? - உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கேள்வி

புதுடெல்லி: காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகள் மீது விசாரணை நடைபெறுகிறது. மதியம் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட், சுதான்ஸு அடங்கிய அமர்வு நேற்று 9.30 மணிக்கு கூடி, வழக்கு விசாரணையை தொடங்கியது. அப்போது நீதிபதி யு.யு.லலித் கூறியதாவது:

காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா? முன்கூட்டியே நீதிமன்றத்துக்கு வந்தால் வழக்குகளை விரைந்து விசாரிக்க முடியும். காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை வழக்குகளை விசாரிக்கலாம். இடையில் 11.30 மணிக்கு அரைமணி நேரம் இடைவெளி விடலாம். பிற்பகலில் நீதிபதிகள் தங்கள் பணிகளை நீதிமன்றத்தில் மேற்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

தற்போதைய தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா ஆகஸ்ட் 27-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்து மூத்த நீதிபதி யு.யு.லலித் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு உச்ச நீதிமன்ற பணி நேரத்தில் மாற்றம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x