Published : 16 Jul 2022 02:47 AM
Last Updated : 16 Jul 2022 02:47 AM

''எங்களுக்கு வேண்டியது நீதியே, அனுதாபம் அல்ல'' - சித்தராமையா கொடுத்த ரூ.2 லட்சத்தை தூக்கி எறிந்த பெண்

கெரூர்: கர்நாடகாவில் இருதரப்பினர் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா வழங்கிய 2 லட்ச ரூபாயை பெண் தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இங்கு கடந்தவாரம் புதன்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை சிலர் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை வேறு மதத்தை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு மதத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். கல்வீசியும் தாக்கி கொண்டனர். 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த பழக்கடைகள், காய் வண்டிகள் ஆகியவற்றை சேதப்படுத்தி தீ வைத்தனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். தீயணைப்பு படையினர் கடைகள், வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முதல்கட்டமாக பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட ஹனீப், ராஜேசாப், ரஃபீக், தவால் மாலிக் ஆகியோரிடம் நலம் விசாரித்தவர் அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் வழங்கினார்.

இதை வாங்க மறுத்த பாதிக்கப்பட்டவரின் மனைவி ஒருவர் பணத்தை சித்தராமையாவிடமே திருப்பி கொடுக்க முயற்சித்தார். ஆனால், அவரை சித்தராமையா சமாதானம் செய்தார். பிறகு காரில் கிளம்பினார். எனினும் சமாதானம் ஆகாத அந்த பெண், பாதுகாப்பு வீரர்களின் வாகனத்தைப் பின்தொடர்ந்து 2 லட்ச ரூபாய் பணத்தை அந்த காரினுள் வீசினார்.

பின்னர் பேசிய அந்த பெண், "எங்களுக்கு வேண்டியது நீதியே தவிர இழப்பீடோ, அனுதாபமோ அல்ல. எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. சித்தராமையாவிடமோ அல்லது வாக்குக் கேட்க வரும் வேறு யாரிடமோ நிவாரணம் கேட்டு தினமும் எங்களால் பிச்சை எடுக்க முடியாது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட என் கணவர் குறைந்தது ஒரு வருடமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டி உள்ளது. அதுவரை என் குடும்பத்தை யார் கவனிப்பார்கள்?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x