Published : 13 Jul 2022 06:16 PM
Last Updated : 13 Jul 2022 06:16 PM

2 மாநிலங்கள், 3 ஆன்மிக தலங்களை இணைக்கும் புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: இணைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தக் கூடிய தரங்கா ஹில் அம்பாஜி அபுசாலை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ரூ.2798.16 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள தரங்கா இந்த புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

116.65 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்படவுள்ள இந்த புதிய ரயில் பாதை பணிகள் 2026 - 27-க்குள் நிறைவேற்றி முடிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணியின் போது, சுமார் 40 லட்சம் மனித வேலை நாள் அளவிற்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் முக்கியமானதாக திகழும் அம்பாஜி-க்கு, குஜராத்திலிருந்தும் நாட்டின் பிறபகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த புதிய ரயில் பாதை மூலம் பக்தர்கள் எளிதாக பயணம் செய்யும் வசதியை ஏற்படுவதுடன், தரங்கா மலை மீது உள்ள அஜித்நாத் ஜெயின் (24 ஜைன தீர்த்தங்கரர்களில் ஒருவர்) கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இணைப்பு வசதி கிடைக்கும்.

புதிய ரயில் பாதை, குஜராத்தின் பனஸ்கந்தா மற்றும் மெஹ்சானா மாவட்டங்கள் மற்றும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் வழியாக அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில்பாதை முதலீடுகளை ஈர்ப்பதுடன், அந்த பிராந்தியத்தின் ஒட்டு மொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x