Last Updated : 11 May, 2016 08:40 AM

 

Published : 11 May 2016 08:40 AM
Last Updated : 11 May 2016 08:40 AM

தமிழ், தெலுங்கு உட்பட மேலும் 6 மொழிகளில் தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள்

தமிழ், தெலுங்கு உட்பட மேலும் 6 மொழிகளில் இரண்டாம் கட்ட தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வின் வினாத்தாளை தயாரித்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்க உள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வு கடந்த 1-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்வு வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் தவே, ஆதர்ஷ் குமார் கோயல் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், “ஆங்கிலம், இந்தி தவிர தமிழ், தெலுங்கு, மராத்தி, அசாம், வங்காளம், குஜராத்தி ஆகிய 6 மொழிகளில் வினாத்தாள் தயாரித்து வழங்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டார்.

3-வது நீதிபதியிடம் ஆலோசனை

அப்போது நீதிபதிகள், “தேர்வு நடத்தும் முடிவை உங்களிடமே விட்டுவிட்டோமே” என்று பதிலளித்தனர். அதற்கு ரஞ்சித் குமார், “எந்தெந்த மொழிகளில் வினாத்தாள் வழங்கலாம் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, இதுகுறித்து முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார். அதற்கு நீதிபதிகள், இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற மூன்றாவது நீதிபதியான சிவகீர்த்தி சிங்கிடம் ஆலோசித்துவிட்டு உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான இந்த வழக்கு ஏற்கெனவே திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தேர்வை நடத்தும் அமைப்பான சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்போது ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படுகிறது. மேலும் 6 மொழிகளில் வினாத்தாள் தயாரித்து வழங்கினால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாக வழிவகுக்கும்” என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மருத்துவம் தொடர்பான பாடநூல்கள் அனைத் தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்ப தால், வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x