Published : 12 Apr 2016 08:43 PM
Last Updated : 12 Apr 2016 08:43 PM
கேரளாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, அந்தக் கோயில் அதிகாரிகள் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி (காளி) கோயி லில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் வாண வேடிக்கை நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 110 பேர் பலியாயினர். மேலும் காயமடைந்த 400-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கும் மாநில அரசு உத்தரவிட்டது.
இதனிடையே, பரவூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பட்டாசு ஒப்பந்ததாரர்கள், அவர்களது உதவியாளர்கள் உட்பட சுமார் 30 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டாசு ஒப்பந்த தாரர்களின் உதவியாளர்கள் 6 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் நடத்தப் பட்ட சோதனையின்போது, கோயிலி லிருந்து 500 மீட்டர் தொலைவில் அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு நிரப்பப்பட்ட 3 கார்கள் நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த கார்களை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றிலிருந்த பட்டாசு களை நேற்று அப்புறப்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று அந்த பட்டாசுகளை அழிக்கப் போவ தாக போலீஸார் தெரிவித்தனர். தடயவியல் நிபுணர்கள் அந்த கார்களிலிருந்த கை ரேகைகளை சேகரித்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவத்துக் குப் பிறகு தலைமறைவாக இருந்த கோயில் அறக்கட்டளை தலைவர் பி.எஸ்.ஜெயலால், செயலாளர் ஜே.கிருஷ்ணன் குட்டி, உறுப்பினர் களான சிவபிரசாத், சுரேந்திரன் பிள்ளை மற்றும் ரவீந்திரன் பிள்ளை ஆகிய 5 பேரும் திங்கள்கிழமை இரவு போலீஸில் சரணடைந்தனர். மேலும் இதர நிர்வாகக் குழு உறுப்பினர்களான சுரேந்திரநாதன் பிள்ளை மற்றும் முருகேசன் ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த 7 பேரையும் கொல்லம் காவல் துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து, துணை கண்காணிப்பாளர் (குற்றப் பிரிவு) ராதாகிருஷ்ணன் பிள்ளை தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
கேரள முதல்வர் உம்மன் சாண்டி, புட்டிங்கல் கோயில் வெடி விபத்து குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “ஏப்ரல் 14-ம் தேதி (நாளை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். அதில் கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவதா அல்லது தடை விதிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.
புட்டிங்கல் தேவி கோயில் வெடி விபத்தையடுத்து, திருவிழாக்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரம் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், பாஜக உள்ளிட்ட சில அமைப்புகள் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்கக் கூடாது என்று கூறி வருகின்றன. இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT