Last Updated : 04 Mar, 2022 01:54 PM

 

Published : 04 Mar 2022 01:54 PM
Last Updated : 04 Mar 2022 01:54 PM

உக்ரைனில் சிக்கிய உ.பி. மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரம்: இதுவரை 400+ மாணவர்கள் மீட்பு

உ.பி திரும்பிய மாணவர்களுடன் பிரதமர் மோடி

புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய உத்தரப் பிரதேச மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க தனியார் மற்றும் போர் விமானங்களில் மொத்தம் 60 பயணங்கள் திட்டமிடுப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை வரை 35 விமானங்கள் இந்தியாவிற்கு மாணவர்களுடன் வந்திறங்கியுள்ளன. இவற்றில் 26 விமானங்கள் டெல்லிக்கும், மீதம் மும்பைக்கும் பத்திரமாக வந்திறங்கியுள்ளன.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்தவற்றில் உத்தரப் பிரதேசத்தின் மாணவர்களும் இடம்பெற்றிருந்தனர். இதில் அவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 400 பேராக இருந்துள்ளது.

உக்ரைனில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 2,500 பேர் மருத்துவம் பயில சென்றதாகத் தெரிகிறது. இவர்களை டெல்லி மற்றும் மும்பையில் வரவேற்கும் உத்தரப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள், அனைவரையும் அவர்களது வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கின்றனர். இவர்கள் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா, அவுரய்யா, லக்கிம்பூர், கேரில், பத்தேபூர், அயோத்யா, ஹமீர்பூர், ஹாபூர், சித்தார்த்நகர், ஜலோன், எட்டாவா, பலியா, பிரயாக்ராஜ், சீதாபூர், பிலந்த்ஷெஹர், அலிகர், கோண்டா, சந்த் ரவிதாஸ்நகர், ராய்பரேலி, மதுரா, ஷாம்லி, வாரணாசி, கவுசாம்பி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

உத்தரப் பிரதேசத்துக்கு வந்தவர்களை அவர்கள் இல்லம் தேடிச் சென்று, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சந்திக்கின்றனர். இதில் ஆட்சியர், துணை ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து மாணவ, மாணவியருடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்தினார். இவர், தம் மக்களவை தொகுதி உள்ளிட்ட மாவட்டங்களில் கடைசி கட்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு வந்திருந்தார்.

உக்ரைனிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வரும் விமானங்களில் சேரும் உத்தரப் பிரதேச மாணவர்கள் தனி கவனம் பெற்றுள்ளனர். இவர்களை விமானநிலையங்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பல மத்திய அமைச்சர்களும் வரவேற்று வருகின்றனர். இதனிடையே, நேற்று இரவு டெல்லிக்கு வரவேண்டிய 12 விமானங்களில் ஐந்து மட்டுமே வந்திருந்தன. இவற்றில் மீதம் உள்ள எட்டு விமானங்கள் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உத்தரப் பிரதேச மாணவர்கள் வந்து சேரவுள்ளனர். மேலும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் உக்ரைனிலிருந்து கிளம்பி ஐரோப்பிய எல்லை நாடுகளில் விமானங்கள் ஏறுவதற்காகக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x