Published : 07 Jan 2022 12:58 PM
Last Updated : 07 Jan 2022 12:58 PM

பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: 'ஆவணங்களை பத்திரமாக வைத்திருங்கள்' - உச்ச நீதிமன்றம்

பிரதமரின் பாதுகாப்பு மீறல் குறித்த வழக்கில் பிரதமரின் பயணத் திட்டத்தின் ஆவணங்களைச் சேகரித்து வைக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி என்.ஜி.ஓ வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பாதுகாப்புக் குறைபாடுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பஞ்சாப் அரசுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன் நடந்த இந்த வழக்கின் விசாரணையில், ''பயணத் திட்டத்தின் ஆவணங்களைச் சேகரித்து வைப்பதுடன், அந்த ஆவணங்களை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றப் பதிவாளர் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். இதற்கு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு மத்திய, மாநில அரசின் விசாரணை முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பதிவாளருக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தொழில்நுட்ப உதவிகளைச் செய்துகொடுக்க வேண்டும். அதே நேரம், திங்கள் கிழமை வரை இந்த வழக்கில் பஞ்சாப் மற்றும் மத்திய அரசின் விசாரணைக் குழுக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார். ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணிவகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடரபாக விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதேபோல் பஞ்சாப் அரசும் ஓய்வுபெற்ற நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா தலைமையில் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x