Published : 20 Mar 2016 11:04 AM
Last Updated : 20 Mar 2016 11:04 AM

உச்ச நீதிமன்றத்தில் காவிரி நதி நீர் வழக்குகளை விசாரிக்க நீதிபதி செலமேஷ்வர் தலைமையில் சிறப்பு அமர்வு: வரும் 28-ம் தேதி முதல் விசாரணை

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 28-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி செலமேஷ்வர் தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 45.327 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘காவிரி நதி நீரை நம்பி 15 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களும், 40 லட்சம் விவசாயிகளும் வாழ்ந்து வருகின்றனர். கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் தமிழகத்தின் மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்துக்கு போதிய நீர் திறந்து விட முடியவில்லை. மேலும் காவிரி நதி நீர் தீர்ப்பாயம் வழங்கிய இறுதி தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. இது கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமான செயலாகும். எனவே தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் திறந்து விடுவதை மேற்பார்வையிட காவிரி கண்காணிப்பு கமிட்டியை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இது தவிர, காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக விசாரிக்க நீதிபதி செலமேஷ்வர் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்ச நீதிமன்றம் நேற்று நியமித்தது. இந்த அமர்வு வரும் 28-ம் தேதி முதல் இவ்வழக்குகளை விசாரிக்கும் என கூறப்படுகிறது. நீதிபதி செலமேஷ்வரை தவிர, இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் ஏ.எம்.சாப்ரே ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x