Published : 31 Dec 2021 06:24 PM
Last Updated : 31 Dec 2021 06:24 PM

குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட அனுமதி ரத்து; அருங்காட்சியகம் நாளை முதல் மூடல்

புதுடெல்லி: கரோனா பரவல் காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் நாளை முதல் மூடப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் 3-4 நாட்களில் கோவிட் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், 22 மாவட்டங்களில் நிலைமை எச்சரிக்கும் வகையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 450 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,764 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் கரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதனையடுத்து டெல்லியில் மக்கள் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

கோவிட்-19 பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்கு நாளை முதல் (ஜனவரி1,2022) அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, காவலர் மாற்ற நிகழ்ச்சியும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x