Published : 25 Jun 2014 10:10 AM
Last Updated : 25 Jun 2014 10:10 AM

பிஹார் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு தூக்கு தண்டனை: போலீஸ் காவலர் உள்பட 7 பேருக்கு ஆயுள்

பிஹார் மாநிலம் பாட்னாவில் 12 ஆண்டுகளுக்கு முன் 3 மாணவர்கள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தின் அப்போதைய ஸ்டேஷன் அதிகாரி ஷம்சே ஆலமுக்கு தூக்கு தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

மேலும் போலீஸ் காவலர் அருண்குமார் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஷம்சே ஆலமும், அருண்குமார் சிங்கும் கொலை குற்றவாளிகள் என, விரைவு நீதிமன்ற நீதிபதி ரவிசங்கர் சின்ஹா கடந்த 5-ம் தேதி அறிவித்தார். மேலும் வியாபாரிகள் 6 பேரை கொலை முயற்சி குற்றவாளிகளாக அவர் அறிவித்தார்.

சாஸ்திரி நகர், சம்மேளன் சந்தையின் வியாபாரிகளான இந்த 6 பேரும், கடந்த 2002 டிசம்பரில், விகாஸ் ரஞ்சன், பிரசாந்த் சிங், ஹிமான்ஷு சேகர் என்ற 3 மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

சந்தையில் எஸ்.டி.டி. பூத் ஒன்றில் கட்டணம் செலுத்துவது தொடர்பான வாக்குவாதம் முற்றியதில் இம்மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து தகவலின் பேரில் அருண்குமார் சிங்குடன் அங்கு வந்த ஷம்சே ஆலம் மாணவர்கள் 3 பேரையும் தலையில் சுட்டுக்கொன்றுள்ளார். இது தொடர்பான போலீஸ் அறிக்கையில் இம்மாணவர்கள் மூவரும் கொள்ளையர்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணையில் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2003-ல் ஆலம் கைது செய்யப்பட்டது முதல் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த வழக்கை முதலில் உள்ளூர் போலீஸாரும் பிறகு சிஐடி போலீஸாரும் விசாரித்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x