Published : 29 Dec 2021 06:44 AM
Last Updated : 29 Dec 2021 06:44 AM

தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு கோரி குடியரசுத் தலைவரின் செயலரிடம் தமிழக எம்.பி.க்கள் குழு மனு: அமித் ஷாவை இன்று சந்திக்கின்றனர்

சென்னை

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியமனுவை குடியரசுத் தலைவரின் செயலரிடம் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு அளித்தது.

ஆளுநரிடம் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார்.

இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குகோரும் மனுவை குடியரசுத் தலைவரிடம் நேரில் வழங்க உள்ளதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார்.

அனைத்து கட்சி எம்.பி.க்கள்

அதன்படி, நேற்று டி.ஆர்.பாலு தலைமையில், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸின் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜ், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்சார்பில் நவாஸ் கனி ஆகியோர் அடங்கிய குழுவினர், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரின் செயலரிடம், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மனுவை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, எம்.பி.க்கள் குழுவினர் இன்று பகல் 12மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பான மனுவை அளிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x