Published : 28 Dec 2021 08:06 AM
Last Updated : 28 Dec 2021 08:06 AM
ஹைதராபாத்: தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் நேற்று அதிகாலை தெலங்கானா ஆயுதப்படை போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்ததில் 4 பெண் மாவோயிஸ்ட்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா ஆயுதப்படை போலீஸார் கடந்த சில நாட்களாக தெலங்கானா - சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த போலீஸார் நேற்று காலை மாவோயிஸ்ட்களை பீஜாப்பூர் மாவட்டம், செர்லாக் அருகே உள்ள குர்லபள்ளி, வெசலபாடு வனப்பகுதிகளில் சுற்றி வளைத்தனர்.
இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. காலை 6 மணி முதல் 8 மணி வரை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், 4 பெண் மாவோயிஸ்ட்கள் உட்பட மொத்தம் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், போலீஸ் தரப்பில் மது எனும் போலீஸ் கமாண்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதன் பின்னர், மாவோயிஸ்ட்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் உடல்களை கைப்பற்றி 2 டிராக்டர்களில் பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் பீஜாப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT