Published : 11 Dec 2021 08:25 AM
Last Updated : 11 Dec 2021 08:25 AM

முஸ்லிம்கள் திறந்தவெளியில் நமாஸ் செய்வதை பொறுக்க முடியாது: ஹரியானா முதல்வர் கருத்து

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி | படம் உதவி ட்விட்டர்

குருகிராம்


முஸ்லிம்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. நமாஸ் செய்வதற்காக வழங்கப்பட்ட அனைத்து இடங்களும் திரும்பப் பெறப்படும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

குருகிராமின் செக்டர் 37 பகுதியில் உள்ள முஸ்லிம்கள் ஏறக்குறைய 2018-ம் ஆண்டிலிருந்து பல்வேறு இடங்களை வாடகைக்கு வாங்கி அங்கு திறந்த வெளியில் தொழுகை நடத்தி வருகின்றனர்.இதில் அரசின் இடங்களும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன

ஆனால், கடந்த சில மாதங்களாக வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அரசின் நிலங்களை குறிப்பிட்ட மதத்தினருக்கு வாடகைக்கு விடக்கூடாது என்றும், திறந்தவெளில் நமாஸ் செய்யவும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கடந்த 3 வாரங்களாக இந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது இடையூறு ெசய்வதும் இருந்தது

இது தொடர்பாக கடந்த 6ம்தேதி முஸ்லிம் அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும், ஆர்எஸ்எஸ்ஆதரவு பெற்ற முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் ஆகியவை சேர்ந்து பேச்சு நடத்தின. இதில் 20க்கும் மேற்பட்ட திறந்தவெளி இடங்களில் வெள்ளிக்கிழமை நமாஸ் நடத்தக்கூடாது என்று முஸ்லிம்களிடம் கூறப்பட்டது.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க முஸ்லிம் அமைப்புகள் மறுத்துவிட்டனர், 37 இடங்களிலும் வழக்கமாக நமாஸ் நடைபெறும் இதை கடந்த 2018ம்ஆண்டிலிருந்து செய்து வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

இதனால், செக்டார் 37 பகுதியில் முஸ்லிம்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்மாநமாஸ் செய்தால், பாடல்களை ஒலிபரப்பி இடையூறு செய்வோம் என வலதுசாரி இயக்கங்கள் தெரிவித்திருந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதுமட்டுமல்லாமல் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டமும் நடந்தது.

இதனால் அமைதியற்ற சூழல் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் நமாஸ் செய்யவில்லை. ஏராளமானோர் வரவில்லை. இருப்பினும் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது முடிந்தது.

இந்நிலையில் குருகிராம் மாநகராட்சி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுைகயில் “திறந்த வெளியில் முஸ்லிம்கள் நமாஸ் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது.

விரைவி்ல் இதற்கு சுமூகமான முடிவு எட்டப்படும். ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்பு வாரியத்தின் இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை முஸ்லிம்கள் வீட்டிலோ அல்லது அவர்களுக்கு உரிய வழிபாட்டு தலங்களிலேயே நமாஸ் செய்யலாம். எந்தவிதமான பிரச்சினையும் வர அனுமதிக்கமாட்டோம்.

பேச்சுவார்த்தைக்குப்பின் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, தொழுகைக்கான இடங்களும் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை புதிய கண்ணோட்டத்தில் அனுகுவோம். காவல் துணை ஆணையர், ஆணையர் ஆகியோர் இதற்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அனைத்து மதங்கள் தொடர்பான நடவடிக்கைகளும் அதற்குரிய வழிபாட்டு தலங்களில்தான் நடக்க வேண்டும் ” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x