Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
பெங்களூரு: கன்னட இசையமைப்பாளர் அம்சலேகா கடந்த சில தினங்களுக்கு முன் மைசூருவில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, “முன்பெல்லாம் பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி தலித் வீட்டுக்கு சென்றார் என பெரிய செய்தியாக வரும். தற்போது அரசியல்வாதிகளான குமாரசாமி, எடியூரப்பா உள்ளிட்டோரும் தலித் வீட்டுக்கு செல்கின்றனர். தலித் வீட்டுக்கு செல்வது பெரிய விஷயம் அல்ல. தலித் மக்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து சோறு போட வேண்டும். பெரிய மனிதர்கள் எல்லாம் தலித் வீட்டுக்கு செல்வதாக கூறுவது பெரிய நாடகம்” என விமர்சித்தார்.
இதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில், தலித் அமைப்பினர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மைசூரு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்ளிட்டோர் அம்சலேகாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அம்சலேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். இந்நிலையில் இந்துக்களின் மனதை அம்சலேகா புண்படுத்திவிட்டதாக அகில பாரத பிராமண மகாசபா அமைப்பினர் பெங்களூரு ஹனுமந்த் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சட்ட வல்லுநரின் ஆலோசனையை பெற்ற பிறகு இதன் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT