Last Updated : 25 Oct, 2021 11:04 AM

 

Published : 25 Oct 2021 11:04 AM
Last Updated : 25 Oct 2021 11:04 AM

பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ தாண்டியதையும் கொண்டாடுங்கள் மோடி: ப.சிதம்பரம் கிண்டல் 

100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நாளை சாதனையாகக் கொண்டாடிய பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும் பாஜகவின் சாதனையாகக் கொண்டாட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி அவரது அமைச்சர்களைக் கொண்டு 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டியதைக் கொண்டாடினார். அதேபோல், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியதையும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரு.1000ஐ தாண்டியதும் இன்னொரு நல்ல வாய்ப்பாக நினைத்து அதையும் கொண்டாடலாமே" என்று பதிவிட்டுள்ளார்.

— P. Chidambaram (@PChidambaram_IN) October 25, 2021

முன்னதாக நேற்று, நாட்டின் மாநிலத் தலைநகரங்கள் அனைத்திலும் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்காவும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து ட்விட்டரில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் வரிக் கொள்ளை நடக்கிறது. ஏதாவது மாநிலத்தில் தேர்தல் வந்தால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தப்படும்’’ என்று கூறியிருந்தார்.

பிரியங்கா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மக்களுக்கு தொல்லைகள் கொடுப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாதனை படைத்துவிட்டது. மோடி அரசில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. அரசு சொத்துக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களின் துயரங்களும் இந்த ஆட்சியில் அதிகரித்துவிட்டன. இந்த ஆண்டில் மட்டும்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.23.53 அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று ஒரு கிண்டல் ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x