Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

உடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல

பெங்களூரு

பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பெண்களின் உடைகளில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குந‌ர் அமித் கவடே கூறியதாவது:

பெங்களூருவில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு பார்சல்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த 21-ம் தேதிஎனது தலைமையிலான அதிகாரிகள் பெங்களூருவில் சரக்கு பார்சல்களை ஆய்வு செய்தோம்.

அப்போது சந்தேகத்துக்குரிய ஒரு பார்சலை சோதித்தபோது பெண்கள் அணியும் விலையுயர்ந்த 3 லெஹங்கா ஆடைகள் இருந்தன. அதன் எடை வழக்கத்தைவிட கூடுதலாக இருந்ததால் அந்த உடையை பிரித்து சோதித்தனர். அப்போது வெள்ளை நிற ஸ்படிகம் போன்ற‌ போதைப்பொருட்கள் அதில் ம‌றைத்து வைக்கப்பட்டிருந்தன. 3 கிலோ எடையுள்ள அதனை பரிசோதித்தபோது விலையுயர்ந்த சூடோஃபெட்ரின், எஃபிட்ரைன் போதைப் பொருட்க‌ள் என தெரியவந்தது. அதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலி முகவரி

இதையடுத்து சம்பந்தப்பட்ட பார்சல் குறித்து விசாரணை நடத்தியதில், அது ஆந்திர மாநிலம் நரசாபுரத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த பார்சலை அனுப்பிய நபர் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில் போலி முகவரிமற்றும் ஆவணத்தை பயன்படுத்திஅந்த‌ பார்சல் அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலி முகவரி கொடுத்து போதைப் பொருளை கடத்த முயன்ற நபரை அதிகாரிகள் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x