Last Updated : 14 Mar, 2016 04:51 PM

 

Published : 14 Mar 2016 04:51 PM
Last Updated : 14 Mar 2016 04:51 PM

பிரிட்டன் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற குழு நோட்டீஸ்

சுப்பிரமணியன் சுவாமி எழுப்பிய பிரிட்டன் குடியுரிமை விவகாரம் தொடர்பாக அத்வானி தலைமையிலான நாடாளுமன்ற குழு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி கூறும்போது, “நாங்கள் இதனை எதிர்கொள்கிறோம்” என்றார். ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து, நாட்டில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளைத் திசைத் திருப்ப இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் நிறுவனம் ஒன்றைத் தொடங்க ராகுல் காந்தி தான் பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிட்டதை சுப்பிரமணியன் சுவாமி சிறிது காலத்திற்கு முன் எழுப்ப, பாஜக எம்.பி.மகேஷ் கிரி இது குறித்து ‘முறையான விசாரணை’ கோரியிருந்தார், இந்த விசாரணை கோரிக்கையை நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாடாளுமன்ற அறக்குழுவிடம் அளித்தார்.

இதனையடுத்து விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி கூறும்போது, ராகுல் காந்தியின் இந்த குடியுரிமை விவகாரம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது குடியுரிமை விவகாரம் ஒரு புரியாத புதிராக உள்ளது, எனவே இது பற்றிய உண்மை நாட்டு மக்களுக்கு தெரிவது அவசியம் என்றார்.

பிரச்சினையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமியும், ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. அதாவது மனுவில் சேர்க்கப்பட்டிருந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் அந்த ஆவணங்கள் பெறப்பட்ட விதம் ஆகியவை பற்றி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x