Last Updated : 17 Jun, 2014 09:11 AM

 

Published : 17 Jun 2014 09:11 AM
Last Updated : 17 Jun 2014 09:11 AM

பேச்சில் தவறிய மோடி, சுஷ்மா: பேஸ்புக், ட்விட்டரில் குவிந்த கருத்துகள்

பூடான் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சென்ற வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவும் இரு நாட்டு ஊடகங்கள் கண்களில் நற்பெயர் பெற்றிருந்தாலும் சின்ன சின்ன சறுக்கல்கள் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாக தவறவில்லை.

அந்த வகையில், பூடான் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 'உரையை துவக்கிய போது இந்த உரையை நேபாள நாட்டிற்கு ஒரு புகழாரம் சூட்டி துவக்க விரும்புகிறேன்' என்றார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு, 'ஜனநாயகத்தைப் பேணி மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் பூடான் நாட்டிற்கு ஒரு புகழாரம் சூட்டி துவக்க விரும்புகிறேன்' என தெரிவித்தார்.

பூடானுக்கு பதிலாக நேபாள் என கூறியது ஒரு தர்மசங்கடமான நிலையாக கருதப்படுகிறது. ஏனெனில், பூடான் நாடு எப்போதுமே நேபாள நாட்டுடன் சுமுகமான உறவில் இருந்ததில்லை.

நாடுகடத்தப்பட்ட நேபாள அகதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பூசல் நிலவுகிறது. இந்நிலையில், பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நேபாள் என பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் வேறு நாட்டின் உரையை வாசித்ததையும், மோடி பூடானுக்கு பதிலாக நேபாள் என கூறியதையும் சமப்படுத்தி கிண்டல் செய்தும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சில கருத்துகள் வெளியாகியிருந்தன.

இதேபோல், பூடான் தலைநகர் திம்புவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் வங்கதேசத்தில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 'பூடான் பயணத்தைவிட சிறப்பாக அமையும்' என்றார். அப்போது அவருடன் பூடான் வெளியுறவுச் செயலர், அதிகாரிகள் இருந்தனர். இது அவர்களுக்கு சற்று நெருடலாக இருந்தாலும் அதை வெளிகாட்டாமல் இருந்து கொண்டனர்.

இத்தகைய சிறு சிறு தவறுகள் நிகழ்ந்திருந்தாலும், பூடான் பயணம் குறித்து பிரதமர் கூறிய சொற்றடரும், மோடி விமான நிலையத்துக்கு சென்ற போது வழி நெடுகிலும் மக்கள் இந்திய, பூடான் கொடிகளை ஏந்தி உற்சாகமாக வழியுனுப்பி வைத்ததும். சில இடங்களில் காரை நிறுத்தி மோடி அவர்களுடன் உரையாடியதுடன், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டதும் மறக்க முடியாத தருணங்களாக அமையும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x