Published : 18 Feb 2016 03:41 PM
Last Updated : 18 Feb 2016 03:41 PM

அப்சல் குரு ஆதரவு கோஷங்களை ஏற்றுக் கொள்வது சகிப்புத்தன்மை ஆகாது: வெங்கய்ய நாயுடு

தேசத் துரோகிகளுக்கு ஆதரவாக எழுப்பப்படும் கோஷங்களை ஆதரித்து ஏற்றுக் கொள்வது சகிப்புத்தன்மையாகாது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டிணத்தில் மின்காந்த சுற்றுச்சூழல் விளைவுகள் மையம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

"நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதை எப்படி நாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

ஜே.என்.யூ. வளாகத்தில் ‘பிராமணீய பண்பாடு’ பற்றி விவாதம் என்று கூறப்பட்டு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது, ஆனால் கடைசியில் அப்சல் குருவுக்கு துதிபாடும் கூட்டமாக மாறிப்போனது.

எனவே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் சக்திகளை இனங்கண்டு தனியாகப் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும்” என்றார்.

இதே நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜே.என்.யூ.வில் நடப்பது வெட்கக் கேடானது என்று வர்ணித்தார். மேலும் ஜே.என்.யூவின் தேச விரோதப் போக்குகளை ஆதரிப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x