Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM
எதிரிநாட்டு ட்ரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே விரைவில் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) முதலீடு தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் நேற்றுநடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீர தீர செயல்களை செய்ததற்காக பிஎஸ்எப் வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
எதிரிநாட்டு ட்ரோன்களை தாக்கிஅழிக்கும் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே விரைவில் உருவாக்கப்படும். பாதுகாப்புத் துறை நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) போன்ற நிறுவனங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ட்ரோன்கள் வழியாக போதைப்பொருட்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகளை கடத்துதல், சுரங்கம் அமைத்து வெடிபொருட்களைக் கடத்துதல் போன்ற சம்பவங்கள் எல்லைப் பகுதியில் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சவால்களை சமாளிப்பது மிகப்பெரிய பணியாக உள்ளது. இதற்காகவே ட்ரோன்களை தாக்கி அழிக்கும்தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்க முடிவு செய்தோம்.
நாம் ஏற்கெனவே செயல்படுத்தி வந்த வெளியுறவு கொள் கையால் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை பாதிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் நாட்டுக்கு சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை வகுக்கப்பட்டது.
அனைவரிடமும் அமைதியான உறவை பேணவே விரும்புகிறோம். ஆனால், நம் இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால் தகுந்த மொழியில் பதில் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT