Last Updated : 07 Dec, 2015 10:00 AM

 

Published : 07 Dec 2015 10:00 AM
Last Updated : 07 Dec 2015 10:00 AM

இந்திய, பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு: காஷ்மீர் குறித்து பாங்காக்கில் பேச்சுவார்த்தை

இந்திய, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பாங்காக்கில் நேற்று சந்தித்துப் பேசினர்.

ரஷ்யாவின் உபா நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசினர். அதன்படி கடந்த ஆகஸ்டில் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்பு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்துப் பேச பாகிஸ்தான் பிடிவாதம் செய்தது. இந்தப் பிரச்சினையால் கடைசி நேரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்தானது.

அதன்பின் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொது சபை கூட்டத்தின்போது நரேந்திர மோடியும் நவாஸ் ஷெரீபும் பங்கேற்றனர். ஆனால் இரு தலைவர்களும் சந்தித்துப் பேச வில்லை.இருநாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துவந்த நிலையில் அண்மையில் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு மாநாட்டின்போது மோடியும் நவாஸும் சிறிது நேரம் நட்புடன் உரையாடினர்.

இதைத் தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர்கான் ஜன்ஜுயா ஆகியோர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது இருநாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் உடன் இருந்தனர்.

பின்னர் கூட்டறிக்கை வெளியிடப் பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இருதரப்பு சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மோடியும் நவாஸும் விரும்புகின்றனர். அதன்படி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பின்போது பாதுகாப்பு, தீவிர வாதம், ஜம்மு-காஷ்மீர், எல்லைப் பிரச் சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x