Published : 30 Dec 2015 08:43 AM
Last Updated : 30 Dec 2015 08:43 AM
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் எம்.ஏ. பட்டப்படிப்பு தொடர்பான ஆவணங்களை வழங்கத் தவறிவிட்டதாக கூறி கான்பூர் பல்கலைக்கழக துணைவேந்தரை பாஜகவினர் நேற்று முற்றுகையிட்டனர்.
வாஜ்பாயின் பட்டமேற்படிப்பு சான்றிதழ் தங்களிடம் இல்லை என்று கான்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயந்த் வினாயக் வைஷம்பாயன் கூறியதை தொடர்ந்து, அவரை கான்பூர் பாஜக தலைவர் சுரேந்திர மைதானி, எம்எல்ஏ சாலில் விஷ்னோய் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு அமளி செய்தனர்.
“1950 காலகட்டத்தில் தயானந்த் ஆங்கிலோ வேதிக் (டிஏவி) கல்லூரியில் வாஜ்பாய் எம்ஏ (அரசியல் அறிவியல்) பயின்றுள்ளார். ஆனால் கான்பூர் பல்கலைக்கழகம் 1966-ல் தான் ஏற்படுத்தப்பட்டது.
வாஜ்பாய் எம்.ஏ முடிக்கும் போது, ஆக்ரா பல்கலைக் கழகத்தின் கீழ் டிஏவி கல்லூரி இருந்தது” என்று துணைவேந்தர் வைஷம்பாயன் கூறினார்.
கான்பூர் பாஜக தலைவர் மைதானி கூறும்போது, “ஆக்ரா பல்கலைக்கழகத்தில் விசாரித்து சான்றிதழ் பெற்றுத் தருவதாக வைஷம்பாயன் எங்களிடம் உறுதி அளித்தார். ஆனால் அவ்வாறு அளிக்கத் தவறிவிட்டார். டிஏவி கல்லூரியிலும் சாதகமான பதில் இல்லை” என்றார்.
“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வாஜ்பாயின் சான்றிதழ் கேட்டு பாஜகவினர் கூப்பாடு போடுவது ஏன்?” என்று வைஷம்பாயன் வியப்பு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT