Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM
தடுப்பூசி போடுவதற்காக 82 வயது மூதாட்டியை கைகளால் தூக்கிச் சென்ற டெல்லி போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் ஷைலா டி சவுசா. இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். இவரை கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண் உள்ளார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஷைலா விரும்பினார். ஆனால் நடந்து செல்ல முடியாத நிலையில் அவரது உடல்நிலை இருந்தது. இதையடுத்து தனது விருப்பத்தை சமூக வலைத்தளங்களில் ஷைலா தெரிவித்தார். இதைப் பார்த்த டெல்லி காஷ்மீர் கேட் போலீஸ் நிலைய போலீஸார் அவர் தடுப்பூசி போடுவதற்கு உதவி செய்வதாக வாக்களித்தனர்.
அவரது வீட்டுக்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் குல்தீப் சிங், 2-வது மாடியிலிருந்து அவரை கைகளால் தூக்கிச் சென்று தடுப்பூசி போட்டு அழைத்து வந்தார்.
இதுகுறித்து குல்தீப் சிங் கூறும்போது, “ஷைலா ஒரு மூத்த குடிமக்கள் பிரிவைச் சேர்ந்தவர். நான் வசிக்கும் பகுதியில் வசித்து வருகிறார். அவரை அடிக்கடி சென்று நான் பார்த்து நலம் விசாரித்து வருவேன். அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பியதும், அதற்கான பதிவுகளைச் செய்தேன்.
அவர் கடந்த 2 ஆண்டுகளாக நடக்க முடியாமல் அவதிப்படுபவர் என்பதால் அவரை கைகளால் தூக்கிச் சென்று உதவினேன். எனக்கு இப்போது பாராட்டுகள் குவிந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனது கடமை மட்டுமே. நாங்கள் வீட்டை விட்டு வந்து காவல் பணியில் இருக்கிறோம். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நமது கடமையாகும்” என்றார்.
ஷைலாவை குல்தீப் சிங் கைகளால் தூக்கிச் செல்லும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT