Published : 24 Dec 2015 08:48 AM
Last Updated : 24 Dec 2015 08:48 AM
“இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடான ரஷ்யாவுக்கு நான் செல்வது, இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும்” என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்ய பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு ஏற்கெனவே நெருங்கிய நட்புறவு உள்ளது. இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடாக ரஷ்யா திகழ்கிறது. என்னுடைய இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்புத் துறைகளை மேம்படுத்த பெரிதும் உதவும். இந்தியா - ரஷ்யா வர்த்தக உறவுகள் மேலும் வலுப்படும். வர்த்தக உறவு மேம்படும்போது இரு நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளும் பயன்பெறும்.
இந்த ரஷ்ய பயணம் மிகுந்த பயனை அளிக்கும் என்று நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்பம், சுரங்கம், அறிவியல் மற்றும் பிற துறைகளிலும் இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நான் பதவி வகித்த போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டேன். அந்த ஆண்டுதான் இந்தியா - ரஷ்யா இடையிலான முதல் மாநாடு நடந்தது. அதன் பிறகு ஆண்டுதோறும் தொடர்ந்து மாநாடு நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ரஷ்யா செல்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்றிரவு மோடி சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT