Published : 25 Mar 2021 01:28 PM
Last Updated : 25 Mar 2021 01:28 PM

அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக கேரள போலீஸார் வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

கோப்புப்படம்

கொச்சி,

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷை மிரட்டி சாட்சியம் அளிக்க வைத்ததாக, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகக் கேரள போலீஸார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அமலாக்கப் பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஆடியோ ஒன்று கசிந்தது.
இதை அடிப்படையாக வைத்து கேரள போலீஸார், முதல்வர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக சிஆர்பிசி 120-பி, 195-ஏ, 192, 167 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த கேரள போலீஸாரின் செயல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

இந்ந மனு உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கப்பிரிவு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், எஸ்.வி.ராஜு , கேரள அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுமன் சக்கரவர்த்தி, மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா ஆஜராகினர்.

கேரள அரசு வழக்கறிஞர் சுமன் சக்ரவர்த்தி வாதிடுகையில் " கேரள போலீஸார் அடையாளம் தெரியாத அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீதுதான் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். எந்த அதிகாரியையும் கைது செய்யவில்லை, ரெய்டு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்த வழக்கில் முக்கியச் சாட்சியிடம் இருந்து வாக்குமூலம் பெற போலீஸார் விரும்புகிறார்கள்.

வழக்குப்பதிவுக்கோ, அல்லது விசாரணைக்கோ தடை விதித்தால், போலீஸாரின் திட்டங்கள் அனைத்தும் வீணாகும், சாட்சியிடம் வாக்குமூலம் பெற முடியாது. இந்த வழக்கில் யாரையும் குற்றவாளியாகச் சேர்க்கவில்லை. இதற்கு கால அவகாசம் தேவை" எனத் தெரிவித்தார்.

அமலாக்கப்பிரிவு இயக்குநர் தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா , "இதற்கு முன் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிய ஸ்வப்னா சுரேஷ் தனக்கு யாரும் எந்த அழுத்தம் கொடுத்ததாகவோ அல்லது கொடுமைப்படுத்தியதாகவோ புகார் ஏதும் தரவில்லை.

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை என ஸ்வப்னா தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதம்" எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி அருண், அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், " குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு ஒரு விசாரணை அமைப்புக்கு வழங்கிய வாக்குமூலங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை எவ்வாறு பெற்று இதில் தாக்கல் செய்தீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமலாக்கப்பிரிவு தரப்பு வழக்கறிஞர் " கலால் வரித்துறையிடம் இருந்துதான் இந்த ஆதாரங்களைப் பெற்றுத் தாக்கல் செய்தோம்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி வி.ஜி.அருண் பிறப்பித்த உத்தரவில், " வரும் 30-ம் தேதிவரை அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகக் கேரள போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அதேநேரத்தில் கேரள போலீஸார் விசாரணைக்குத் தடைவிதிக்க முடியாது. வழக்குப்பதிவையும் ரத்து செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x