Last Updated : 25 Mar, 2021 11:59 AM

 

Published : 25 Mar 2021 11:59 AM
Last Updated : 25 Mar 2021 11:59 AM

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர சாத்தியமில்லை: சுஷில் குமார் மோடி பேச்சு

பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி முறைக்குள் கொண்டு வருவதற்குச் சாத்தியமில்லை, அவ்வாறு கொண்டு வந்தால், அனைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாஜக எம்.பி.யும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

2021ம் ஆண்டுக்கான நிதி மசோதா குறித்த விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது அதில் பாஜக எம்.பி. சுஷில்குமார் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு வரி விதிப்பதன் மூலம் ஆண்டுக்கு மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து ரூ.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகின்றன. இந்த சூழலில் அடுத்த 10 ஆண்டுக்கு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி முறைக்குள் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

ஏனென்றால், பெட்ரோல், டீசல் மூலம் மாநிலங்களுக்கு ஆண்டு ரூ.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகின்றன. ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால், அந்த வருவாயை இழக்க நேரிடும், எந்த மாநில அரசும் அற்குத் தயாராக இல்லை.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிமுறைக்குள் கொண்டுவந்தால், அதிகபட்சமாக 28 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்க முடியாது. 28 சதவீதம் வரி விதித்தால், பெட்ரோல், டீசல் மீது ரூ.14 மட்டுமே வரியாக எடுக்க முடியும்.

ஆனால், தற்போது பெட்ரோலியம் பொருட்கள் மீது 60 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதாவது 100 ரூபாய் பெட்ரோலில் 60 ரூபாய் வரியாக விதிக்கப்படுகிறது. ரூ.35 மத்திய அரசு வரியாகவும், ரூ.25 மாநில அரசு வரியாகவும் விதிக்கப்படுகிறது.

அப்படி இருக்கும் போது 28 சதவீதம் வரிவிதித்து ரூ.2.லட்சம் கோடி முதல் ரூ.2.50 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட எந்த மாநில அரசும் தயாராக இல்லை.

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரியை வசூலதித்துதான் மக்களின் நல்வாழ்வுத் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், நாட்டின் நலனுக்குச் செலவிடப்படுகிறது.

ஆனால், சிலர் ஜிஎஸ்டி வரியை கப்பார் சிங் வரி என்று கூறுகிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள எந்த மாநில அரசும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர விரும்பவில்லை.

இவ்வாறு சுஷில் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x