Last Updated : 22 Mar, 2021 01:06 PM

 

Published : 22 Mar 2021 01:06 PM
Last Updated : 22 Mar 2021 01:06 PM

அதிகமான ரேஷன் பொருட்களுக்கு அதிக குழந்தைகள் பெறுங்கள்: உத்தரகாண்ட் முதல்வர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

அதிகமான ரேஷன் பொருட்கள் வேண்டுமென்றால், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

உத்தரகாண்ட்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கிறது. இங்கு முதல்வராக இருந்த திரேந்திர சிங் ராவத் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், அதிருப்தியும் நிலவியது. இதையடுத்து திரேந்திர சிங் ராவத் கடந்த சில வாரங்களுக்கு முன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக மக்களவை எம்.பி. தீரத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

முதல்வராகப் பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைவதற்குள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி தீரத் சிங் ராவத் சிக்கலில் உள்ளார். பெண்களின் உடையைப் பற்றிப் பேசிய தீரத் சிங் ராவத், கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் ஒழுக்கமில்லாதவர்கள், அவர்கள் சமூகத்துக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் என்ன கூற வருகிறார்கள் என்று பேசியது சர்ச்சையானது.

தீரத் சிங் ராவத் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துப் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, தீரத் சிங் ராவத் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் தீரத் சிங் ராவத் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், "இந்தியாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காதான் கரோனாவில் அதிகமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை 200 ஆண்டுகள் அடிமையாக்கி வைத்திருந்த அமெரிக்கா, உலகத்தையே ஆட்டிப்படைத்தது.

கரோனா காலத்தில் நம் நாட்டில் பிரதமராக நரேந்திர மோடி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் என்ன நடந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. மிகவும் மோசமான நிலையைச் சந்தித்திருக்கும். பிரமதர் மோடிதான் நம் நாட்டைக் காப்பாற்றினார்" என்று பெரிய அதிர்ச்சித் தகவலை அளித்தார்.

இந்நிலையில், மற்றொரு நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சங் ராவத் பேசுகையில்," கரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டதாகப் புகார் கூறுகிறார்கள்.

ஆனால், உண்மையில் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 10 குழந்தைகள் இருந்தால் 50 கிலோ ரேஷன் பொருட்கள் கிடைக்கும். 20 பேர் இருந்தால் ஒரு குவிண்டால் தானியம் கிடைக்கும். 2 குழந்தைகளுக்கு 10 கிலோ தானியங்கள்தான் கிடைக்கும்.

இதனால் குறைவான குழந்தைகள் பெற்றுள்ளவர்கள், அதிகமான ரேஷன் பொருட்கள் வாங்குவோரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். இதில் யாரைக் குறைகூறி என்ன பயன். அதிகமான ரேஷன் பொருட்கள் வேண்டுமென்றால் 20 பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x