Last Updated : 21 Mar, 2021 10:42 AM

 

Published : 21 Mar 2021 10:42 AM
Last Updated : 21 Mar 2021 10:42 AM

வீட்டு வாசலுக்கே ரேஷன் விநியோகிக்கும் டெல்லி அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி

வீட்டு வாசலுக்கே ரேஷன் விநியோகிக்கும் டெல்லி அரசின் திட்டத்திற்கு மத்திய அரசின் விதிமுறைகளால் தடை ஏற்பட்டுள்ளது. இதை உள்நோக்கத்துடன் மத்திய அரசு செய்வதாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கண்டித்துள்ளது.

டெல்லியில் சுமார் 17 லட்சம் பொதுமக்கள் ரேஷன் உணவு பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு கரோனா பரவலால் ஊரடங்கு அமலாக்கப்பட்டக் காலத்தில் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

பொதுமக்களின் பாரட்டை பெற்ற இச்செயல்பாட்டை, டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் நிரந்தரத் திட்டமாக செயல்படுத்த முடிவு செய்தார். இதற்காக ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜ்னா(வீடுதோறும் ரேஷன் வழங்கும் முதல்வர் திட்டம்)’ எனும் பெயரில் மார்ச் 25 முதல் அமல் செய்வதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தை டெல்லியில் அமலாக்க முடியாது என மத்திய உணவுத்துறை அமைச்சகம் முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் இந்த உணவுப் பொருட்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுவதால் அதன் சட்டதிட்டங்களின்படி அவற்றை வீட்டிற்கே அனுப்பி வைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வேண்டுமானால் டெல்லி அரசு அதற்காக தனியாக ஒரு திட்டத்தை அமலாக்கிக் கொள்ளலாம் எனவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தி உள்ளது. இதனால், இன்னும் நான்கு தினங்களில் அமலாகவிருந்த இத்திட்டத்தை டெல்லி அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளரான சவுரவ் பரத்வாஜ் கூறும்போது, ‘மக்களுக்கு பலன் தரும் இதுபோன்ற திட்டங்களை டெல்லியில் அமலாக்குவதை மத்திய அரசு தடை செய்யக் கூடாது.

இதற்கான சட்டதிட்டங்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற்று மக்களுக்கு பயனடைய அனுமதிக்க வேண்டும். டெல்லியில் ரேஷன் கடைகள் முறையாக செயல்படுவதில்லை என்ற புகாரின் காரணமாக ஆம் ஆத்மி அரசு இத்திட்டத்தை அறிவித்திருந்தது.’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஜூலையில், ஓட்டுநர் உரிமம், குடியிருப்பு மற்றும் சாதிச்சான்றிதழ்கள் உள்ளிட்ட 100 வகையான அரசு சேவைகளை டெல்லி அரசு அறிமுகப்படுத்தி படிப்படியாக செயல்படுத்துகிறது. இதனால், பொதுமக்களின் நேரமும், பயணச்செலவும் மிச்சமாவதால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு பாராட்டுகளை பெற்று வந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x