Published : 20 Mar 2021 07:41 PM
Last Updated : 20 Mar 2021 07:41 PM

சென்னை வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதுடெல்லி

ஏப்ரல் மாத இறுதியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டுள்ள நிலையில் அவர் சென்னைக்கும் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வருவதாக இருந்தது. இந்திய குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது பிரிட்டனில் கரோனா 2வது அலை ஏற்பட்டதால் அவரது பயணம் ரத்தானது. பிரிட்டனில் உருமாறிய கரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர்இந்தியயா வர முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் ஏப்ரல் இறுதியில் இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளார். பிரெக்ஸிட் வெளியேறுதலுக்குப் பின்னர் பிரிட்டன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்த அதுவும் குறிப்பாக ஆசிய, பசிபிக் பிராந்தியத்துடன் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 11 பசிபிக் ரிம் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய-பசிபிக் சுதந்திர வர்த்தக தொகுதியான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரிட்டன் கடந்த மாதமே விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. அதேபோல் ஆசியான்(ASEAN) கூட்டமைப்பில் ஆலோசகராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளது.

எனவே ஆசிய- பசிபிக் பகுதியில் வர்த்தக உறவை மேம்படுத்தும் விதமாக போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் அமையும் எனத் தெரிகிறது. இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் டெல்லி மட்டுமின்றி சென்னைக்கும் வர திட்டமிட்டுள்ளார். இது குறித்த தகவல் வெளியாகியுள்ள போதிலும், அவரது சென்னையின் பயணம் முழுமையாக இன்னமும் திட்டமிடப்படவில்லை.

இதுதொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தகவல் மட்டும் அனுப்பியுள்ளது. விரைவில் அவரது பயணத்திட்டம் வெளியாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x